Thursday, 25 October 2012

நிலைத்திருக்கும் நினைவுகள் 
**************************
பிறந்து வளர்ந்த இடம் மனதில் பயிரிட்டதோ 
ஆயிரம் ஆயிரம் நினைவுகள் 
அவையாவும் நான் ஆடிய களத்தையும் 
வாடிய கணத்தையும் தன்னுள் உயிராய் 
சேமித்து இன்றும் செழித்து
வளர்ந்து கொண்டே இருக்கிறது

தாய் மாமனின் உயிரம் கண்டு அஞ்சி
அன்னையின் சேலைத் தலைப்பில் ஒளிந்த கணம்
வீட்டு கடைக்குட்டியாய் அல்லி ராஜ்ஜியம்
நடத்திய என் வீட்டு முற்றம்

அக்கா அண்ணன் என எல்லோரும் ஏங்கி நிற்க
என்னை மட்டும் வாரச் சந்தைக்கு
அழைத்துச் செல்லும் பாட்டி
எப்பொழுது உண்டாலும் ஆசையாய் எனக்கு
உணவை ஊட்டாமல் தான் உண்ணாத சிற்றப்பா

பள்ளி விடுமுறையில் அண்ணனே மன்னனாய்
தட்டாமல் பின்பற்றும் சேனை என நாங்கள்
அண்ணன் தலைமையில் மீன் பிடித்த குட்டையும்
களிமண் எடுத்த மாமன் வீட்டுக் காடும்
இன்று காணும் போது வெறும் ஏக்கம் மட்டுமே

காடை விரட்டிய சோளக்காடும்
பாம்பை கண்டு பதறிய ஏரியும்
நீச்சல் கற்றுக் கொடுத்த பக்கத்து வீட்டு அண்ணனும்
மிதிவண்டி ஓட்டிப் பழக்கிய ஆசை அக்காள்களும்
முதல் முதலில் ஓட்டிய அப்பாவின் வண்டியும்
ஐந்தாவது படிக்கும் பொழுது வீட்டுக்குக்
கொணர்ந்த தொலைக்காட்சிப் பெட்டியும்

பள்ளிக் காலத்தில் எழுதிய முதல் கவிதை
போட்டிகள் பெற்றுத் தந்த பரிசு
இன்றும் பசுமையாய் தொடரும் நட்பு

இன்னும் இன்னும் இன்னும்.................
எத்தனையோ ஆயிரம் நினைவுகள்
மூச்சு முட்டும் இத்தனை நினைவுகளும்
நிலைத்திருக்கும் எக்காலத்திற்கும் 


நட்புச் சரித்திரம்
----------------------

தவறு செய்பவன் மனிதன் 
பரிகாரம் தேடிப் பகிர்பவன் நண்பன் 

ஆதரவு காட்டி அணைக்கும் நட்பு
அகிம்சையால் மனம் தேற்றி
மெளனமாய் வலி நீக்கி
வலிய கரம் கொண்டு மீட்டெடுக்கும்

மறக்கப்பட்டு மீண்டது நண்பனாய்
இல்லாமல் தவறு தொடரின் 
விட்டு விலகியும் நின்று விடும்


அன்னையாகிய என்னுள்
**********************

உன்னை என்னுள் உணர்ந்த 
அந்த நாள் முதல் 
என் மனக்கோட்டையின் அரசாட்சி 
முழுவதிலும் நீ

ஏதேதோ கற்பனைகள்
இரவு பகலாய் உன் நினைவு
கையில் உறவாடிய புத்தகத்தில்
கருத்து நிலைக்கவில்லை
கண்கள் தேடியதோ உனக்கான
பெயர் அடையாளத்தை

ஆயிரம் உறவுகள் எனக்கு இருந்தும்
ஆயிரத்து ஒன்றாக
என்னுள் வந்த நீ மட்டுமே எல்லாமாய்

தனிமையை நான் உணராத
அந்தப் பத்து மாதங்கள்
அழகிய அவ்வின்ப நாட்கள் யாவும்
உனக்கே சமர்ப்பணம் உறவே

இதோ உன்னை காணும் ஏக்கத்துடன்
வலி தாங்கி மனம் ஏங்கிய கணம்
உன் குரல் கேட்ட இன்ப சிலிர்ப்புடன்
சிறு மயக்கம்

ஒளி தேடிய கண்ணும்
உன் வாசம் தேடிய நாசியும்
உன் ஸ்பரிசம் தேடிய மனதும்
விழித்து எழுந்ததோ உயிர் வரை
சென்று தாக்கிய வேறு ஒலி கேட்டு

பெரும் சிலிர்ப்புடன் பெற்றவளின்
குரல் கேட்டு திறந்த என் கண்கள்
முழுவதிலும் தெங்கி நின்ற ஏக்கம் யாவும்
என் அன்னையே உனக்காக

அன்னை இன்பம் உணர்ந்த பின்
என் இதயம் முழுவதும்
அம்மா உன் உயிரோவியம்

உள்ளம் நிறைத்த இரு உறவின்
உயிர் ஸ்பரிசம் கண்ட அந்த நொடி
இன்றுவரை இன்பம் தரும் 
நினைவின் கல்வெட்டு